ஞாயிறு, 4 ஜனவரி, 2009

இனியவளே

இனியவளே....

நினைவிருக்கிறது....

உன்னை முதல் முதலாய் பார்த்த கணம்...

யாரோ என்பதாய் முகம் திருப்பிக்கொண்டாய்...

உன் கண்களில் தான் எத்தனை கூச்சம்

பரவாயில்லை.....

முதல் பார்வை தானே என நினைத்துக் கொண்டேன்.

உன் கன்ன சிவப்பும் மின்னும் இதழும்

என் எண்ணத்தில் நிறைந்ததன....

.காலமெல்லாம் உன் காலடியில் கிடக்க

மனம் துடிக்குதடி கண்மணி......



தினமும் என்னைப் பார்க்கும் போதெல்லாம்

ஏதேதோ நீ சொல்ல நினைப்பதையும்..

வார்த்தைகள் தடுமாறி தவித்ததையும்..

இப்பொதும் என்னால் மறக்க முடியாது...

நீ முதன் முதலாய் என்னிடம் சொன்ன வார்த்தைகள்....

இன்னும் ரீங்காரமாய் என் செவிகளில்...


உன் விரல் பிடித்து நடக்கும் போது

குழந்தையாய் மாறிப் போனேனே...

புல்லுக்கும் வலிக்காமல் நடப்பாயடி...

என் கண்மணி...


நாம் பறிமாறிய முத்தங்கள் எத்தனை..

மறக்க இயலாதடி...

உனக்கு நான் தருவதை விட

எனக்கு நீ தரும் போது

உன் முகத்தைப் பார்க்க வேண்டுமே.....

உனக்கு நான் அவ்வளவு பிரியமா என்ன?


என் மார்பில் சாயாமல் நீ தூங்கியதில்லை..

நானும் தான்....

நடுநிசியில் என்னை இறுக்கிக் கொள்வாய்..

பொல்லாத சொப்பனங்களா என் பொன்மணிக்கு?



உன் முத்தங்கள் இன்றி விடிந்ததில்லை

என் காலைப் பொழுதுகள்...

குட்டி போட்ட பூனையாய் சுற்றி வருவாய்

நான் கிளம்பும் வரை...

மாலை வரை எப்படி உன்னைப் பாராமல் இருப்பது??

இந்த எண்ணத்திலேயே கழிகிறது என் பகல்கள்..



உனக்குப் பிடித்த இனிப்போடு நான் வீடு வர

நீ எனக்காக காத்திருப்பாய் வாசலிலேயே

எனக்குப் பிடித்த புன்னகையோடு...



பக்கத்து வீட்டு பூனை குட்டி போட்டது முதல்

உன் அம்மாவிடம் சண்டை போட்டது வரை

வாய் ஓயாமல் பேசும் உன்னை

விழி இமைக்காது பார்க்கிறேன்.....


என் தாயின் கைருசி மறந்து போனேன்...

உன் கைகள் ஊட்டிய கவளத்தை உண்ட போது...

என் உணவின் முதல் கவளத்தை எப்போதும்

சொந்தமாகிக் கொள்வது நீ தானே........


முதல் முதலாய் நாம் தனியே

இரு சக்கர வண்டியில் சென்ற நாளில்

என் கண்மணி என்னைக் கட்டிக்கொண்டாய்...

உன் முகத்தில் என்ன பெருமிதம்...


காய்ச்சலில் நான் துவண்டபோது உன் கண்களில்

ஏனடி இவ்வளவு கவலை...???

உனக்காகவே மீண்டு வந்தேன் சீக்கிரமாய்....




கடற்கரை மணலில் கால் புதைய நடந்ததும்,

பூங்கா ஊஞ்சலில் தேவதையாய் நீ ஆடியதும்,

வளர்ந்த குழந்தையாய் பஞ்சு மிட்டாய் தின்றதையும்..

எதையும் மறக்கவில்லையடி நான்....



ஆம்....மறக்கவில்லை.....

நீ உன் காதலை என்னிடம்

சொன்ன தினத்தையும் தான்........

உன் கண்களில் சிறு பயமும்,

கொஞ்சம் படபடப்புமாய்...

நீ உன் காதலை சொன்னாய்...

என் மவுனம் கண்டு கலங்கித்தான் போனாய்....

'பிடிக்கலையா?', தப்பா?' என பல முறை கேட்டாய்....

உன் கன்னத்தில் வழிந்த கண்ணீர் சொன்னது

உன் காதலின் ஆழத்தை.......



என் புன்னகையால் நான் சம்மதம் சொன்னதும்

உன் முத்தம் என் கன்னதில் சொன்னது

தன் நன்றியை....



இனியவளே,


உன் சித்தம் என் பாக்கியம்,

உன் நினைவுகள் என் பொக்கிஷம்,

நினைவுகள் மட்டுமல்ல நீயும் தான்

என்னை மறந்து விடாதே கண்ணே...

என்னவளே...என்னைப் புதுப்பித்தவளே...

என் செல்ல மகளே....

கோபம்

மழைக்கு ஏன் இந்த கோபம்???

கொட்டித் தீர்க்கிறது....

ஒ.... 

உன்னைத் தொட விடாமல்

குடை தடுக்கிறதா???

மின்னல்

பெண்ணே...

அடிக்கடி சிரிக்காதே...

மின்னலைப் பார்ப்பது 

கண்களுக்கு நல்லதல்ல....

மனதிற்கும் தான்....

இப்படிக்கு காதல்...

அன்பே,

உனக்கு செல்லப் பிராணிகள் பிடிக்குமாமே......

என்னையும் கொஞ்சம் கொஞ்சேன்....


இப்படிக்கு,

உன் காலடியில் குழையும் பூனையாய் என் காதல்...

நீ என்ன சூரியனா?

என் ஒவ்வொரு இரவையும் பகலாக்குகிறது உன் புன்னகை..
என் ஒவ்வொரு பகலையும் இரவாக்குகிறது உன் மவுனம்..
அன்பே நீ என்ன சூரியனா?

சனி, 3 ஜனவரி, 2009

இவள்

இவள் 
ஒரு மழைக் காதலி்
கொஞ்சம் மழலைக் காதலி
தனிமைக் காதலி
சிறிய கவிதைக் காதலி
இரவுக் காதலி
இன்று இணையக் காதலி
நிலவுக் காதலி
நல்ல நட்பின் காதலி
இசைக்  காதலி
இனிய நூல்களின் காதலி
இவள் 
எப்போதும் தமிழ்க்காதலி